செய்திகள்
விபத்து

காரிமங்கலம் அருகே விபத்து- தனியார் கல்லூரி மாணவர் பலி

Published On 2019-09-12 04:13 GMT   |   Update On 2019-09-12 04:13 GMT
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே கம்பிவேலி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் தனியார் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தருமபுரி:

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் போலீஸ் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் சுரேஷ். இவரது மகன் பரத் கிஷோர் (வயது19). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.இ. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவரது நண்பர் அதே பகுதியை சேர்ந்த தினேஷ் (19).

இவர்கள் 2 பேரும் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகேயுள்ள காளப்பனஅள்ளி கிராமத்தில் உள்ள உறவினர் திருமண நிகழ்ச்சிக்காக வந்தனர். பின்னர் அவர்கள் இருவரும் அங்கிருந்து மாட்லாம்பட்டி திருமண மண்டபத்திற்காக சென்றனர்.

அப்போது அங்குள்ள தனியார் கல்லூரி அருகே உள்ள வளைவு பகுதியில் வந்த போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி எதிர்பாராத விதமாக சாலையோர மின்வேலி மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பரத் கிஷோர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் தினேசுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்தவரை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காரிமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் பலியான பரத் கிஷோரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News