செய்திகள்
பழ வியாபாரிக்கு நூதன தண்டனை கொடுத்த இளம்பெண்.

குமரியில் சபலத்துக்கு ஆளான பழ வியாபாரிக்கு இளம்பெண் கொடுத்த நூதன தண்டனை

Published On 2019-08-25 10:10 GMT   |   Update On 2019-08-25 10:10 GMT
பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் ஒருவருக்கு பாதிக்கப்பட்ட இளம்பெண் நூதன முறையில் பாடம்புகட்டிய சம்பவம் குமரி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தென்தாமரைகுளம்:

குமரியில் பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை ஒரு பெண் பொறிவைத்து மடக்கிப்பிடித்து சரமாரியாக அடித்து உதைத்து அதை தனது செல்போனில் படம் பிடித்து வாட்ஸ்-அப்பில் பரவவிட்டதன் மூலம் இந்த சம்பவம் வெட்டவெளிச்சமாகி உள்ளது.

இளம்பெண் கல்லூரி படிப்பை முடித்தவர். அவருக்கு பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து திருமண ஏற்பாடுகளையும் செய்து உள்ளனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் அந்த பெண் துணிச்சலுடன் தனக்கு நேர்ந்த கொடுமையை தட்டிக் கேட்கும் விதமாகவும், தானே தண்டனை வழங்கும் வகையிலும் இந்த செயலில் ஈடுபட்டு உள்ளார்.

6 நிமிடம் 7 விநாடிகள் ஓடும் அந்த வீடியோ குமரி மாவட்டம் முழுவதும் பலரது செல்போன்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த பெண்ணின் துணிச்சலான செயல், இதுபோல தவறு செய்ய நினைப்பவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கத் தோன்றும் வகையில் உள்ளது.

பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர், இளம்பெண் வீடு இருக்கும் பகுதியில் பழக்கடை நடத்தி வருகிறார். மேலும் அந்த பகுதியில் மொத்தமாக பழங்களை வாங்கி வைக்க தென்னை கூரையால் ஆன குடோனும் அமைத்து உள்ளார்.

குடோனுக்கு பழங்களை எடுக்கச் செல்லும்போது அந்த பெண்ணிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டு உள்ளார். தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தது பற்றி போலீசில் புகார் செய்தால் அவருக்கு உடனடியாக தண்டனை கிடைக்காது என்பதால் தானே அவருக்கு தண்டனை வழங்க அந்த பெண் முடிவு செய்தார்.

அதன்படி பழ வியாபாரி பழ குடோனுக்கு வரும்போது செல்போனுடன் தயாராக காத்திருந்தார். பழ வியாபாரி வந்ததும் தனது செல்போனில் அவரை வீடியோ எடுத்தபடி சரமாரியாக தாக்குகிறார். இதை எதிர்பார்க்காத அந்த வாலிபர் அதிர்ச்சியடைந்து அந்த பெண்ணை எதிர்க்கிறார். ஆனால் கோபத்தின் உச்சியில் இருந்த பெண்ணின் தாக்குதலால் அவர் அடங்கி ஒடுங்கிவிடுகிறார்.

அந்த வாலிபரை தாக்கியபடி அந்த பெண் பேசும் வார்த்தைகள் அச்சில் வெளியிட முடியாத அளவுக்கு இருக்கிறது. தான் செய்த தவறை அந்த வாலிபர் உணரும் அளவுக்கு திட்டித் தீர்க்கிறார். ஒரு கட்டத்தில் அதை தாங்க முடியாத வாலிபர் தன்னை அடித்தால் செத்துவிடுவேன் என்று மிரட்டிப் பார்க்கிறார். ஆனால் அதற்கு அசராத பெண் செத்து தொலை என்று கூறியபடி வெளுத்து வாங்குகிறார்.

எனது உறவினர்களுக்கு தெரிந்தால் உன்னை தொலைத்து விடுவார்கள். ஆனாலும் நானே தண்டனை கொடுத்தால்தான் எனது ஆத்திரம் அடங்கும் என்று கூறியபடி தனது கோபம் தீரும்வரை அந்த வாலிபரை அடித்து உதைக்கிறார். பெண்ணின் தாக்குதலில் இருந்து தப்பிப்பதற்காக பழ குடோனின் ஓலை கூரையை பிய்த்து கொண்டு அந்த வாலிபர் தப்பி ஓடுகிறார்.

பாதிக்கப்பட்ட பெண் அகஸ்தீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் என்பதும், அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது.

இந்த வீடியோ வெளியான பிறகு பழ வியாபாரி வீட்டை விட்டு வெளி யேறிவிட்டார். அவர் அவமானத்திற்கு பயந்து நெல்லைக்கு ஓடியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த பரபரப்பு வீடியோ போலீஸ் உயர் அதிகாரிகள் கவனத்திற்கும் சென்று உள்ளதால் அவர்கள் அது பற்றி விசாரிக்க உத்தரவிட்டு உள்ளனர்.

Tags:    

Similar News