மேல்மலையனூர் அருகே பலத்த மழை - வீடு இடிந்து விழுந்து 7-ம் வகுப்பு மாணவன் பலி
மேல்மலையனூர்:
விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அருகே உள்ள கோவில் துறையூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்லமுத்து (வயது 40). கூலி தொழிலாளி. இவரது மகன் சிவபிரகாஷ் (12).
அதே கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று இரவு சிவபிரகாஷ் மற்றும் அவரது பெற்றோர் வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தனர்.
அந்த பகுதியில் இரவு பலத்த மழைபெய்தது. அப்போது செல்லமுத்து வீட்டின் மேற்கூரை இடிந்து கீழே தூங்கி கொண்டு இருந்தவர்கள் மீது விழுந்தது. இதில் சிவப்பிரகாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான். அவனது பெற்றோர் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர்.
தகவல் அறிந்து வந்த அவலூர்பேட்டை போலீசார் சிவப்பிரகாஷின் உடலை கைப்பற்றி செஞ்சி அரசு ஆஸ்பத்திரியில் பிரேதபரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
மேலும் இதுகுறித்து அவலூர்பேட்டை வருவாய் ஆய்வாளர் ரவி விசாரணை நடத்திவருகிறார்.