நீலகிரியில் பலத்த மழை- வீடு இடிந்து தொழிலாளி பலி
ஊட்டி, ஆக. 8-
நீலகிரி மாவட்டத்தில் 6-வது நாளாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. பலத்த சூறாவளி காற்றுடன்மழை பெய்ததால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தன. சாலைகளில் மண்சரிவு ஏற்பட்டது.
இதனால் சாலைகள் பெயர்ந்து பாளம்பாளமாக வெடித்து கிடந்தன. மரம் மற்றும் மண் சரிவால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் புகுந்தது. பேரிடர் மீட்பு குழு, தீயணைப்பு துறை, வனத்துறை சேதம் அடைந்த பகுதிகளுக்கு சென்று சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.பொதுமக்கள் வெளியே செல்ல முடியாதவாறு தொடர் மழை பெய்வதால் வீட்டிலேயே முடங்கினர். வேலைக்கு செல்லும் சிலர் கடும் அவதியடைந்தனர். கூடலூர் தேன் வயல் ஆதிவாசி மக்கள் பாதுகாப்பு கருதி வெள்ள நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை நீலகிரி மாவடடம் எமரால்ட் பகுதியில் மழையால் வீடு இடிந்ததில் சென்னி (வயது 65). தொழிலாளி பலியானார். போலீசார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். * * * பலியான தொழிலாளி சென்னியின் உடல் மீட்கப்பட்ட காட்சி.