திண்டுக்கல்லில் சிறுமியை கர்ப்பிணியாக்கிய 2 பேர் போக்சோவில் கைது
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தார். கடந்த சில நாட்களாக இந்த சிறுமியின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டது. இதை உணர்ந்த பெற்றோர் அவரை மருத்துவர்களிடம் காண்பிப்பதற்காக திண்டுக்கல்லுக்கு அழைத்து வந்தனர். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் அந்த சிறுமியை பரிசோதித்தனர்.
அப்போது அவள் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவளிடம் பெற்றோர் விசாரித்தனர். அப்போது சிறுமியின் கர்ப்பத்துக்கு காரணம் சிறுமலை பழையூரைச் சேர்ந்த மணி (23), சின்னத்தம்பி (43) ஆகியோர் என தெரியவந்தது.
இதையடுத்து சிறுமியின் பெற்றோர் திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் அமுதா வழக்குபதிவு செய்து மணி, சின்னத்தம்பி ஆகிய 2 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.