செய்திகள்
தமிழிசை சவுந்தரராஜன்

காஞ்சிபுரம் வரும் மக்களுக்கு வசதிகள் செய்து தர வேண்டும்- தமிழிசை சவுந்தரராஜன் கோரிக்கை

Published On 2019-07-16 06:32 GMT   |   Update On 2019-07-16 06:32 GMT
அத்திவரதரை தரிசிக்க காஞ்சிபுரம் வரும் மக்களுக்கு வசதிகள் செய்து தர வேண்டும் என்று தமிழக அரசுக்கு தமிழிசை சவுந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை:

தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

40 ஆண்டுகளுக்கு ஒரு முறை எழுந்தருளியிருக்கும் பெருமை மிகு அத்திவரதரை தரிசிக்க நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணம் இருக்கிறார்கள்.

பக்கத்துக்கு மாநிலத்தைத் தாண்டி இப்போது வெளிநாடு வாழ் மக்களும் வர ஆரம்பித்து இருக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியான ஒன்று. ஆனால் மக்கள் கூடும் கூட்டத்திற்கான முன் ஏற்பாடுகள் இல்லாததால் மக்கள் தினம் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

மாவட்ட நிர்வாகம், மாநில நிர்வாகம் சிறப்பான ஏற்பாடுகள் செய்திருந்தாலும் இது நாளுக்கு நாள் பெருகி வரும் கூட்டத்திற்கு போதுமானதாக இல்லை. மக்கள் அதிக நேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. தினம் தினம் பொதுமக்கள் தொடர்பு கொண்டு அதிக வசதிகள் செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கிறார்கள். குறிப்பாக நான் அரசிற்கு வைக்கும் வேண்டுகோள்.

* தெற்கு மாட வீதியில் பக்தர்களுக்கு தேவையான தங்குமிட வசதி செய்து தர வேண்டும்.

* பக்தர்களுக்கு வேண்டிய அளவிற்கு பக்தர்கள் நின்று கொண்டிருப்பது எந்த இடமாக இருந்தாலும் குடி தண்ணீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும்,

* பாதுகாப்பு வசதி குறிப்பாக பக்தர்கள் கொண்டு செல்லும் பொருள்களுக்கு பாதுகாப்பு வசதி ஏற்பாடு செய்ய வேண்டும்.

* பக்தர்கள் தமிழகம் முழுவதும் இருந்து காஞ்சிபுரம் வர பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

* குறிப்பாக தமிழக பா.ஜ.க. கோரிக்கை வைத்ததின் பேரில் சென்னையிலிருந்து காஞ்சிபுரம் வரை புறநகர் ரெயில் சேவை அதிகரிக்கப்பட்டிருக்கிறது என்பதை நினைவு கூற விரும்புகிறேன்.

* வயதான மற்றும் ஊனமுற்றோருக்கு கோவிலுக்கு அருகில் தற்காலிக கழிப்பறை வசதிகள் தேவை. அதுமட்டுமல்ல கூட்டத்தின் அளவிற்கு ஏற்ப குறிப்பாக பெண்கள் பயன்படுத்த அதிக எண்ணிக்கையில் கழிப்பறைகள் அமைத்துத்தர வேண்டுகிறேன்.

* கழிப்பறைகள் அமைப்பது மட்டுமல்ல அதை தொடர்ந்து உபயோகத்திற்கேற்றார்போல் சுத்தம் செய்யப்பட வேண்டியது அவசியம்.

* செட்டி தெரு, வடக்கு மாட வீதி, தெற்கு மாட வீதி மற்றும் டோல் கேட் பகுதிகளில் தகவல் மையங்கள் ஏற்படுத்தி பக்தர்களுக்கு உதவிட வேண்டும்.

* கோவில் வளாகத்திற்குள் தரிசனத்தின் நேரடி ஒளிபரப்பைக் காணொளி திரைகள் மூலமாக ஒளிபரப்பினால் தரிசனத்திற்காக காத்திருக்கும் பக்தர்களுக்கு இது பேரூதவியாக இருக்கும். நேரத்தின் கடினம் தெரியாமல் இருக்கும்.

* அதேபோல் ஆகம விதிகளுக்கு உட்பட்டு தரிசன நேரத்தை அதிகரிக்க வேண்டும்.

* முக்கிய நபர்களின் வருகை முறைப்படுத்தப்பட வேண்டும். அவர்களுக்கென்று தனி நேரம் ஒதுக்கி பின்பு மற்ற நேரங்கள் எல்லாம் தொடர்ந்து பொதுமக்கள் வணங்குவதற்கு ஏற்பாடு செய்யலாம்.

* கூடும் கூட்டத்திற்கு ஏற்ப மருத்துவ வசதிகள் செய்யப்பட வேண்டும். ஆம்புலன்ஸ் வசதி அதிகரிக்கப்பட வேண்டும்.

* ஆன்மிக வருகை காஞ்சியின் வளர்ச்சிக்கும் பயன்படும் வகையில் அங்கே வரும் கூட்டம் சுற்றுலாவை மேம்படுத்தும் அளவிற்கும்...பட்டுக்கு பேர் போன இடமாக இருப்பதால் வெளியிலிருந்து வருபவர்கள் நெசவாளர்களின் வாழ்வு மலர பட்டு வணிகத்திற்கு உதவுமாறு சில ஏற்பாடுகளையும் செய்தல் நலம்.

* பக்தியோடு அத்திவரதரை தரிசிக்க மக்களின் சார்பில் இவையெல்லாம் எங்கள் வேண்டுகோள். இவற்றை விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News