மயிலம் அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்தது- 5 பேர் படுகாயம்
மயிலம், ஜூலை.10-
சென்னை உத்திரமேரூர் கம்மாளம்பூண்டி பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 42), இவர் தனது மனைவி சாந்தி (39), மகன் மணி(25), மற்றும் உறவினர்கள் பிரவீன், ராமன் ஆகியோருடன் நேற்று ஒரு காரில் சென்னையில் இருந்து கள்ளக்குறிச்சி அடுத்த நைனார்பாளையம் பகுதிக்கு புறப்பட்டார்.
காரை மணி ஓட்டினார். அந்த கார் சென்னை- திருச்சி சாலையில் மயிலம் அருகே உள்ள சின்ன நெற்குணம் தனியார் பள்ளி அருகே இன்று அதிகாலை வந்து கொண்டிருந்தது.
அப்போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த முருகேசன், சாந்தி, பிரவீன், மணி, ராமன் ஆகிய 5 பேரும் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
விபத்துகுறித்து மயிலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். * * * விபத்தில் சிக்கிய கார் சேதமடைந்துள்ளதை படத்தில் காணலாம்.