திருமங்கலத்தில் இன்று லேப்டாப் வழங்கக்கோரி மாணவிகள் சாலை மறியல்
பேரையூர்:
தமிழக அரசின் இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் மாணவ- மாணவிகள் பயனடைந்தனர். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக லேப்டாப் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் பல மாணவ- மாணவிகளுக்கு லேப்டாப் கிடைக்க வில்லை.
கடந்த சில வாரமாக லேப்டாப் வழங்கக்கோரி மாநிலம் முழுவதும் மாணவ- மாணவிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டத்திலும் நாள் தோறும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
கோரிக்கையை வலியுறுத்தி திருமங்கலம் பி.கே.என். பெண்கள் மேல் நிலைப்பள்ளி பிளஸ்-1, பிளஸ்-2 மாணவிகள் 150-க்கும் மேற்பட்டோர் இன்று காலை திருமங்கலம் பெரியகடை வீதி ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது லேப்டாக் வழங்காத அரசை கண்டித்தும், உடனே லேப்டாப் வழங்கக்கோரியும் கோஷம் எழுப்பினர்.
மறியல் குறித்து தகவலறிந்த திருமங்கலம் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். மாணவிகளின் சாலை மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.