செய்திகள்

தக்கலை அருகே நண்பரின் மனைவியை 2-வது திருமணம் செய்த டிரைவர் தற்கொலை

Published On 2019-06-23 12:25 GMT   |   Update On 2019-06-23 12:25 GMT
தக்கலை அருகே குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தக்கலை:

தக்கலை அருகே உள்ள அழகியமண்டபம் பனங்காலவிளையைச் சேர்ந்தவர் அஜித் (வயது 29). ஜே.சி.பி. ஆபரேட்டர். இவர் அதே பகுதியைச் சேர்ந்த சஜிதா (28) என்ற பெண்ணை கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

சஜிதா ஏற்கனவே திருமணம் ஆனவர். அவரது முதல் கணவர் விபத்தில் இறந்து விட்டார். கணவரின் நண்பரான அஜித், சஜிதாவுக்கு உதவிகள் செய்து வந்தார். நாளடைவில் அவர்களுக்கு இடையே காதல் மலர்ந்தது. பின்னர் சஜிதாவையே அஜித் திருமணம் செய்து கொண்டார்.

அஜித்துக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் சஜிதா அவரை கண்டித்து வந்தார். நேற்று இரவும் அஜித் குடித்து விட்டு வந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. சஜிதா வீட்டுக்கு வெளியே சென்று அழுது கொண்டு நின்றார். அப்போது திடீரென அஜித் வீட்டுக்குள் சென்று கதவை பூட்டினார். பின்னர் சஜிதாவின் சுடிதார் துப்பாட்டாவால் தூக்குப்போட்டு தொங்கினார்.

வீட்டுக்குள் சென்ற கணவரை காணாதது கண்டு சஜிதா ஓடி வந்தார். அப்போது அஜித் தூக்கில் தொங்கியபடி உயிருக்கு போராடினார். அதை பார்த்து சஜிதா சத்தம் போட்டு அலறினார். அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் ஓடி வந்து அஜித்தை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அஜித் நேற்று இரவு இறந்தார்.

இது குறித்து சஜிதா தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News