செய்திகள்

போலீஸ் லத்தி வீச்சில் தந்தை பலி-தாய் தற்கொலை முயற்சி: பாசத்துக்கு ஏங்கும் 1 1/2 வயது குழந்தை

Published On 2019-06-19 10:39 GMT   |   Update On 2019-06-19 10:39 GMT
போலீஸ் லத்தி வீச்சில் தந்தை பலியான நிலையில், இந்த சோகத்தில் தாயும் தற்கொலைக்கு முயன்றதால் 1 1/2 வயது குழந்தை பாசத்திற்காக ஏங்கித்தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மதுரை:

மதுரை எஸ்.ஆலங்குளத்தைச் சேர்ந்த வியாபாரி விவேகானந்தகுமார் கடந்த 15-ந் தேதி மோட்டார் சைக்கிளில் சென்றபோது போலீசார் லத்தி வீசி தாக்கியதில் பலத்த காயமடைந்து அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பலியான விவேகானந்த குமாரின் மனைவி கஜபிரியாவும், கணவரின் மரண சோகத்தால் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் கஜபிரியா மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இவர்களின் 1 1/2 வயது ஆண் குழந்தை சாய் அவின். எப்போதும் பெற்றோரின் அரவணைப்பில் இருந்த இந்த குழந்தை தற்போது உறவினர்களின் கைகளில் அழுதுகொண்டே இருக்கிறது.

தந்தை பலியாகி விட்டார். தாயும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது கூட தெரியாமல் தாய், தந்தையை காணாமல் உறவினர்களிடம் சாய் அவின் அழுது கொண்டே இருப்பது பார்ப்பவர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அப்பா, அம்மா என்று அழைக்கக்கூட முடியாத நிலையில் அந்த குழந்தை கண்ணீரை மட்டுமே வெளிக்காட்டி தனது பாச போராட்டத்தை தொடர்ந்து வருகிறது.

Tags:    

Similar News