உள்ளூர் செய்திகள்

கோவில்பட்டியில் பெயிண்டர் குத்திக்கொலை

Published On 2024-05-10 06:28 GMT   |   Update On 2024-05-10 06:28 GMT
  • கொலை செய்யப்பட்ட முத்துப்பாண்டிக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
  • போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவில்பட்டி:

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாரதிநகர் பகுதியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது 42). இவர் பெயிண்டராகவும், பணம் கொடுக்கல்-வாங்கல் தொழில் செய்தும் வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று இரவு முத்துப்பாண்டி வீரவாஞ்சி நகரில் உள்ள அவரது தாய் மாரியம்மாள் வீட்டில் இருந்தபோது அவரை தேடி சிலர் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது அவரிடம், கொஞ்சம் பேச வேண்டும் என்று கூறி வெளியே அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகே முத்துப்பாண்டி பாட்டிலால் குத்திக்கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இது குறித்து தகவல் கிடைத்ததும் கோவில்பட்டி மேற்கு போலீஸ் நிலைய போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் முத்துப்பாண்டியை தேடி வந்த நபர்கள் யார்? முன்விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா? பணம் கொடுக்கல் வாங்கலில் கொலை செய்யப்பட்டாரா ? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்று முன்தினம் டாஸ்மாக் பாரில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட மறுநாளே இந்தக் கொலைச் சம்பவம் நடைபெற்று இருப்பது கோவில்பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொலை செய்யப்பட்ட முத்துப்பாண்டிக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

Tags:    

Similar News