செய்திகள்
வெடி விபத்தில் காயமடைந்தவரை மீட்டு கொண்டு செல்லப்பட்ட காட்சி.

திருவேங்கடம் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 5 பேர் படுகாயம்

Published On 2019-05-15 08:20 GMT   |   Update On 2019-05-15 08:20 GMT
திருவேங்கடம் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
சங்கரன்கோவில்:

நெல்லை மாவட்டம் திருவேங்கடம் தாலுகாவிற்கு உட்பட்ட கிராமம் வரகனூர். இந்த கிராமத்தில் செயல்பட்டு வந்த ஒரு பட்டாசு ஆலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 7 பேர் பலியானார்கள். இதனைத் தொடர்ந்து அந்த ஆலைக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

இந்த வெடிவிபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிந்து பட்டாசு ஆலை உரிமையாளரை தேடி வந்த நிலையில் விபத்தில் அவர் பலியானார். அதிகாரிகள் சீல் வைத்ததால் அந்த பட்டாசு ஆலை செயல்படாமல் இருந்தது.

இந்த நிலையில் அந்த பட்டாசு ஆலையில் இன்று மீண்டும் வெடிவிபத்து ஏற்பட்டது. அதில் விருதுநகர் மாவட்டம் மாங்குடியை சேர்ந்த கோபால் (வயது61), கனகராஜ் (46), அர்ஜுன் (17), குருசாமி (62), காமராஜ் (58) ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் 2 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

‘சீல்’ வைக்கப்பட்ட பட்டாசு ஆலையில் மீண்டும் வெடிவிபத்து ஏற்பட்டது எப்படி? என்பது மர்மமாக உள்ளது. இது தொடர்பாக போலீசார் மற்றும் வருவாய் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.




Tags:    

Similar News