செய்திகள்

மதுரையில் நோயாளிகள் 5 பேர் பலி: ரூ25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்- தினகரன் அறிக்கை

Published On 2019-05-09 09:26 GMT   |   Update On 2019-05-09 09:26 GMT
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் உயிரிழந்த 5 நோயாளிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தினகரன் வலியுறுத்தியுள்ளார். #AMMK #TTVDhinakaran #MaduraiGovernmenthospital
சென்னை:

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

மதுரை அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறையின் அலட்சியத்தால் நோயாளிகள் 5 பேர் பலியாகி இருக்கும் சம்பவம் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. மதுரை அரசு மருத்துவமனையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு விபத்துகளில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பூஞ்சுத்தி கிராமத்தைச் சேர்ந்த மல்லிகா, ஸ்ரீவில்லிபுத்தூர் ரவிச்சந்திரன், ஒட்டன்சத்திரம் பழனியம்மாள், உடுமலைப்பேட்டை ஆறுமுகம், செல்லத்தாய் ஆகிய 5 பேரும் மின்தடையால் செயற்கை சுவாச கருவி(வென்டிலேட்டர்) இயங்காமல் உயிரிழந்திருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

சுகாதாரத் துறையின் அலட்சியமான செயல்பாட்டால் அப்பாவி நோயாளிகள் 5 பேரின் உயிர் பறிபோய் இருப்பது கண்டனத்திற்குரியது. பழனிசாமி அரசின் நிர்வாகம் எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதற்கு இச்சம்பவம் சான்றாக அமைந்துள்ளது. இந்த மக்கள் விரோதிகளின் மோசமான அரசாட்சியில் நோயாளிகளுக்குக் கூட பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

இச்சம்பவத்தை வழக்கம் போல மூடி மறைக்க முயலாமல், முறையான விசாரணை நடத்தி, தமிழகத்தில் இது போன்ற நிகழ்வுகள் இனி எங்கும் நடக்காமல் இருப்பதற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். நோயாளிகள் பலியாவதற்கு காரணமானவர்கள் மீது சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #AMMK #TTVDhinakaran #MaduraiGovernmenthospital
Tags:    

Similar News