செய்திகள்

தூத்துக்குடியில் கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் குத்திக்கொலை- 2 பேர் கைது

Published On 2019-05-04 13:00 GMT   |   Update On 2019-05-04 13:00 GMT
தூத்துக்குடியில் கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபரை குத்திக்கொலை செய்த லாரி டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி:

தூத்துக்குடி புதுக்கோட்டை அருகே உள்ள வடக்கு காலாங்கரையை சேர்ந்தவர் பொன்னுதுரை. இவரது மகன் லிங்கதுரை (வயது20) கூலி வேலை பார்த்து வந்தார். அதே ஊரை சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மகன் மேகலிங்கதுரை (27).

லாரி டிரைவரான இவருக்கு பானு என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். லிங்கதுரையும், மேகலிங்கதுரையும் உறவினர்கள் ஆவர். இவர்களது வீடும் அருகருகே உள்ளன. உறவினர் என்ற முறையில் மேகலிங்கதுரையின் வீட்டிற்கு லிங்கதுரை அடிக்கடி சென்று வந்துள்ளார்.

இந்நிலையில் லிங்கதுரைக்கும், மேகலிங்கதுரையின் மனைவி பானுவுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனை அறிந்த மேகலிங்கதுரை தனது மனைவி மற்றும் லிங்கதுரையை கண்டித்துள்ளார். ஆனால் அவர்கள் தங்களது கள்ளத்தொடர்பை கைவிடவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த மேகலிங்கதுரை, தனது லாரியில் கிளீனராக பணிபுரியும் புதுக்கோட்டை அருகே உள்ள சிலுக்கன் பட்டியை சேர்ந்த கோபியை அழைத்து கொண்டு நேற்றிரவு லிங்கதுரை வீட்டிற்கு சென்றனர். அங்கு வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த லிங்க துரையை கத்தியால் குத்தினர். இதில் படுகாயமடைந்த லிங்க துரை ரத்த வெள்ளத்தில் துடி துடித்தபடி கிடந்தார்.

இதையடுத்து தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளிலேயே மேகலிங்கதுரை, கோபி ஆகிய இருவரும் தப்பி சென்று விட்டனர். லிங்கதுரை கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தை அறிந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சம்பவ இடத்தில் திரண்டனர். அவர்கள் லிங்கதுரையை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இந்த கொலை குறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமலை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் லிங்கதுரையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து லிங்கதுரையை கொன்ற மேகலிங்க துரை மற்றும் கோபியை தேடினர்.

இந்நிலையில் அவர்கள் இருவரையும் போலீசார் இன்று அதிகாலை கைது செய்தனர். தனது மனைவியுடனான கள்ளத்தொடர்பை கைவிடாததால் லிங்க துரையை கொன்றதாக மேகலிங்கதுரை வாக்குமூலம் அளித்துள்ளார். கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் புதுக்கோட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News