செய்திகள்

புதுவை அருகே தச்சு தொழிலாளி அடித்து கொலை- நண்பர்கள் கைது

Published On 2019-04-25 14:40 GMT   |   Update On 2019-04-25 14:40 GMT
புதுவை அருகே தச்சு தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது நண்பர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சேதராப்பட்டு:

புதுவையை அடுத்த தமிழக பகுதியான பெரிய கோட்டக்குப்பம் பெரியபட்டினத்தார் வீதியை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 36). தச்சு தொழிலாளியான இவருக்கு திருமணமாகவில்லை. இவரும், அதே பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் (24), சுரேஷ் (22) ஆகிய 3 பேரும் ஒரே இடத்தில் வேலை செய்து வந்ததால் நண்பர்களாக பழகி வந்தனர். மேலும் வேலை முடிந்ததும் 3 பேரும் ஒன்றாக மரு அருந்துவது வழக்கம். 

அதுபோல் நேற்று முன்தினம் இரவு 3 பேரும் ஒன்றாக மது அருந்தினர். அப்போது மோகன்ராஜுக்கும், சுரேசுக்கும் இடையே குடிபோதையில் தகராறு ஏற்பட்டது. அந்த நேரத்தில் தனக்கு ஆதரவாக ஏழுமலை வருவார் என்று சுரேஷ் கூறியதோடு சினிமா படத்தில் வருவது போன்று என்னை தாக்கிய நீ ஏழுமலையை தாக்க முடியுமா? என்று சுரேஷ் விளையாட்டாக பேசினார். 

அப்போது மோகன்ராஜ் ஆத்திரம் அடைந்து ஏழு மலையிடம் நீ என்ன பெரிய தாதாவா? என்று கூறி அவரது கன்னத்தில் அறைந்தார். மேலும் ஏழு மலையை கீழே பிடித்து தள்ளினார். இதில் தடுமாறி விழுந்த ஏழுமலைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. 

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மோகன்ராஜும், சுரேசும் செய்வதறியாமல் திகைத்து போய் நின்றனர். பின்னர் சுதாரித்து கொண்டு ஏழுமலையை மீட்டு மோட்டார் சைக்கிளில் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். 

அங்கு ஏழுமலை மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து விட்டதாக கூறி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு ஏழுமலை பரிதாபமாக இறந்து போனார். இதையடுத்து கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ் பெக்டர் சரவணன் விசாரணை நடத்தினார். பின்னர் கொலை வழக்காக பதிவு செய்து மோகன்ராஜ் மற்றும் சுரேஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
Tags:    

Similar News