செய்திகள்

திருவாரூர் அருகே பாலியல் பலாத்கார முயற்சியில் தப்பிய மாணவி தீக்குளித்து தற்கொலை

Published On 2019-04-15 10:39 GMT   |   Update On 2019-04-15 10:39 GMT
பாலியல் பலாத்கார முயற்சியில் தப்பிய மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவாரூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூத்தாநல்லூர்:

பொள்ளாச்சியில் இளம்பெண்களை பாலியல் பலாத்கார செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் பெண்கள் எதிரான பாலியல் பலாத்கார சம்பவங்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று மகளிர் அமைப்புகளும், அரசியல் கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் பாலியல் பலாத்கார சம்பவத்தில் தப்பிய ஒரு மாணவி மன முடைந்து தீக்குளித்து தற் கொலை செய்து கொண்டது திருவாரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் 10-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று அந்த மாணவி தனது வீட்டில் தனியாக இருந்தார். அவருடைய பெற்றோர் வெளியே சென்று இருந்தனர்.

அப்போது கூத்தாநல்லூர் அருகே உள்ள வடகோவனூர் பகுதியை சேர்ந்த 4 பேர் வீட்டுக்குள் திடீரென புகுந்தனர். அவர்கள் மாணவியை பலாத்காரம் செய்ய முயன்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, அவர்களிடம் இருந்து தப்பித்து வீட்டில் இருந்து வெளியே ஓடினார்.

ஆனாலும் மாணவியை விடாமல் 4 பேரும் துரத்தி சென்றனர். ஒரு காட்டுப்பகுதியில் நுழைந்த அந்த மாணவியை 4 பேரும் பிடித்து கீழே தள்ளி, அடித்து துன்புறுத்தி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று உள்ளனர். 4 பேரின் கோரப்பிடியில் இருந்து மீண்டும் தப்பித்த அந்த மாணவி தனது வீட்டுக்கு வந்து மண்எண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளித்தார்.

இதில் உடல் கருகி ஆபத்தான நிலையில் இருந்த மாணவியை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று மாணவி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து மாணவியின் தந்தை கூத்தாநல்லூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் தாஸ் (வயது21), அஜித்(19), விஜய் (20), முருகேசன் (19) ஆகிய 4 பேரும் சேர்ந்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்ததும், இதனால் மனவேதனை அடைந்த மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். தலைமறைவாக உள்ள அவர்கள் 4 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்த நிலையில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவத்தில் தொடர்புடைய 4 பேரையும் உடனடியாக கைது செய்யக்கோரி வடகோவனூர் கிராம மக்கள் கூத்தாநல்லூர் போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர்.

அப்போது 4 வாலிபர்கள் மீதும் வழக்குபதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்று சிறிதுநேரம் கோ‌ஷமிட்டனர். உடனே போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News