செய்திகள்

வானூர் அருகே நாட்டு வெடிகுண்டு வீச்சு - வாலிபர் படுகாயம்

Published On 2019-04-15 05:33 GMT   |   Update On 2019-04-15 05:33 GMT
வானூர் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி வாலிபர் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #bombrange

வானூர்:

விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறைகாசிப் பாளையத்தை சேர்ந்தவர் உதயகுமார்(வயது 38). இவர் அதேபகுதியில் செங்கல்சூளை நடத்தி வருகிறார்.

இவர் தொழில் சம்பந்தமாக பணம் வசூல் செய்ய புதுவை சென்றிருந்தார். பின்னர் நேற்று இரவு உதயகுமார் புதுவையில் இருந்து காசிப்பாளையத்துக்கு ரூ.50 ஆயிரம் பணத்துடன் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அவர் நள்ளிரவு 12 மணிக்கு காசிப்பாளையம் சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது உதயகுமாரை மர்மகும்பல் திடீரென்று வழிமறித்தனர்.

அவர்களை பார்த்ததும் உதயகுமார் அதிர்ச்சி அடைந்தார். உடனே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அருகில் உள்ள முந்திரிதோப்புக்குள் ஓடினார். அங்கிருந்து உதயகுமார் தனது உறவினர் மற்றும் நண்பர்களுக்கு செல்போன் மூலம் மர்மகும்பல் வழிமறித்த தகவலை தெரிவித்தார்.

உடனே அவரது உறவினர் மணிபாலன்(28) உள்பட 4 பேர் சம்பவ இடத்துக்கு வந்தனர். மர்மகும்பலை பிடிக்க முயன்றனர். இதைபார்த்த மர்மகும்பல் அவர்கள் மீது சரமாரியாக வெடிகுண்டு வீசினர். இதில் உதயகுமாரின் உறவினர் மணிபாலன்(28) என்பவர் படுகாயம் அடைந்தார். அவரை புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அவரது உறவினர்கள் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து உதயகுமார் வானூர் போலீஸ்நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வெடிகுண்டு வீசிய மர்மகும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

தொழில் போட்டி காரணமாக வெடிகுண்டு வீச்சு சம்பவம் நடந்ததா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்று போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். #bombrange

Tags:    

Similar News