செய்திகள்

பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்- எஸ்.பி.வேலுமணி பேச்சு

Published On 2019-02-25 15:10 GMT   |   Update On 2019-02-25 15:10 GMT
வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதியிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்று நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார். #ministerspvelumani #admk

கோவை:

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி, கோவை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கோவை மாவட்ட தலைமை அலுவலகத்தில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது.

மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பி.ஆர்.ஜி. அருண்குமார் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார்.விழாவில் தையல் எந்திரங்கள், சலவை எந்திரம், மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

அ.தி.மு.க. ஆட்சி கலைந்துவிடும் என்று மு.க.ஸ்டாலின் உள்பட பலர் கனவு கண்டார்கள். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சிறந்த ஆட்சியையும், நிலையான ஆட்சியையும் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். மக்கள் நல திட்டங்கள் ஜெயலலிதா வழியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மு.க.ஸ்டாலின் அமைச்சராக இருந்தபோது கிராமங்களுக்கு செல்லாமல் இப்போது கிராமசபை கூட்டங்களை நடத்தி வருகிறார். தமிழ்நாட்டில் உள்ள 12,564 கிராமங்களுக்கும் நல்ல சாலைகளை அமைத்து கொடுத்துள்ளோம்.

பாராளுமன்ற தேர்தலுக்காக பா.ஜனதா, பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளுடன் வெற்றி கூட்டணி அமைத்துள்ளோம். இந்த கூட்டணி அமைத்தது முதல் ஸ்டாலின் குழப்பத்தில் தவித்து வருகிறார். இந்த தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். மக்கள் அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்க தயாராகிவிட்டனர்.

இவ்வாறு அவர் பேசினார்.  #ministerspvelumani #admk

Tags:    

Similar News