நாசரேத் அருகே கிராம நிர்வாக அதிகாரி-மனைவியை மிரட்டி நகை-பணம் கொள்ளை
நாசரேத்:
தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் அருகிலுள்ள கடையனோடை கிராமத்தை சேர்ந்தவர் ஜெயசீலன் (வயது 77), ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அதிகாரி. இவரது மனைவி பிரேமா (70). இவர்களது மகன்கள் வெளிநாட்டில் உள்ளனர். இந்நிலையில், நேற்று இரவு இவர்கள் இருவரும் வீட்டில் இருந்தனர்.
அப்போது வீட்டின் மாடிவழியாக கதவை உடைத்து முகமூடி அணிந்த கொள்ளையர்கள் இருவர் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். ஜெயசீலனின் அறைக்குள் சென்ற அவர்கள் அரிவாளை காட்டி தம்பதியரை மிரட்டி அவர்களிடம் இருந்த 32 பவுன் தங்க நகை மற்றும் ரூ.37 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
முன்னதாக அந்த கும்பல் அங்கு இருந்த கண்காணிப்பு கேமராக்களையும் உடைத்து சேதப்படுத்தினர். இதுகுறித்து நாசரேத் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சாத்தான்குளம் டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன், நாசரேத் இன்ஸ்பெக்டர் ராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், மணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். சம்பவ இடத்துக்கு மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது.
தடயவியல் நிபுணர்களும் வந்து ரேகைகளை பதிவு செய்தனர். இதுகுறித்து நாசரேத் போலீசார் வழக்கு பதிவு செய்து நகை,பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த துணிகர கொள்ளை சம்பவம் நாசரேத் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.