கொடநாடு விவகாரத்தில் முதல்-அமைச்சர் பதவி விலக வேண்டும்- நல்லக்கண்ணு பேட்டி
தூத்துக்குடி:
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு தலைமையில் தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உரிய அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக நல்லக்கண்ணு உள்ளிட்ட 17 பேர் மீது தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
இந்த வழக்கு தூத்துக்குடி ஜெ.எம்.1 கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. இதை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் நல்லக்கண்ணு இன்று கோர்ட்டில் ஆஜரானார். இந்த வழக்கை வருகிற ஏப்ரல் 25-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி அண்ணாமலை உத்தரவிட்டார். முன்னதாக நல்லக்கண்ணு கோர்ட்டு வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய பட்ஜெட்டில் 5 ஆண்டில் செய்யாத அறிவிப்புகளை பா.ஜனதா அரசு வெளியிட்டுள்ளது. பா.ஜனதா அரசுக்கு எதிரான கூட்டணி வலுவாக உருவாகி உள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்.
ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கூடாது. கொடநாடு விவகாரத்தில் முதல் அமைச்சர் மீதே குற்றச்சாட்டு உள்ளது. எனவே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலகி விசாரணையை எதிர்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். #nallakannu #kodanadissue #edappadipalanisamy