செய்திகள்

திருநாகேஸ்வரம் ராகு கோவிலில் பக்தர்களுக்கு பாலுக்கு பதில் பால்கோவா பிரசாதம்- அர்ஜூன் சம்பத் புகார்

Published On 2019-01-18 10:05 GMT   |   Update On 2019-01-18 10:05 GMT
திருநாகேஸ்வரம் ராகு கோவிலில் பக்தர்களுக்கு பாலுக்கு பதில் பால்கோவா பிரசாதம் வழங்கப்போவதற்கு அர்ஜூன் சம்பத் கண்டனம் தெரிவித்துள்ளார். #arjunsampath #ThirunageswaramRahuTemple

கும்பகோணம்:

இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கும்பகோணத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பொங்கல் பண்டிகையை மையமாக வைத்து ஜல்லிக்கட்டு, சேவல்சண்டை, சிலம்பம், கபடி உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வந்தது. பாரம்பரிய விளையாட்டு போட்டிகளில் சேவல் சண்டை, கிடா சண்டை போன்ற விளையாட்டு போட்டிகளுக்கு பல இடங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டிகளை தடைசெய்வதால் பொங்கல் பண்டிகையின் உற்சாகம் குறைந்து கொண்டே வருகிறது. எனவே சேவல் சண்டை, கிடா சண்டை உள்ளிட்ட கிராம விளையாட்டு போட்டிகளை நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும்.

கிறிஸ்தவ தேவாலயங்களில் தமிழர்களின் பாரம்பரிய நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இந்த விழாவுக்கு இந்துக்களை வரவழைத்து கிறிஸ்தவர்களாக மதமாற்றம் செய்வதற்காக தற்போது தமிழர்களின் சடங்கு சம்பிரதாயங்களை கொண்டாடி வருகிறார்கள்.

கொடநாடு விவகாரத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. தெகல்கா நிறுவனத்தை யாரோ பயன்படுத்துகிறார்கள். தேர்தல் நேரத்தில் ஏதாவது ஒரு கட்சியினருடன் ஒப்பந்தம் செய்து கொண்டு மற்றொரு கட்சியின் பெயரை கெடுக்க தெகல்கா நிறுவனம் செயல்படுகிறது. எனவே உண்மை நிலையை கண்டறிய மத்திய- மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருநாகேஸ்வரம் ராகு கோவிலில் அபிஷேக பால் பக்தர்களுக்கு பிரசாதமாக வினியோகிக்கப்பட்டு வந்தது.

ஆனால் தற்போது அந்த அபிஷேக பாலுக்கு பதிலாக பக்தர்களுக்கு பால்கோவா வழங்க தொடங்கி உள்ளனர். இது மிகவும் கண்டிக்கத்தக்கது. எனவே மீண்டும் பக்தர்களுக்கு அபிஷேக பால் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். #arjunsampath #ThirunageswaramRahuTemple

Tags:    

Similar News