செய்திகள்

செஞ்சி அருகே தந்தையை அடித்து கொன்ற மகன்

Published On 2018-12-31 08:18 GMT   |   Update On 2018-12-31 08:18 GMT
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே தந்தையை மகனே அடித்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
செஞ்சி:

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஏதாநெமிலி பகுதியை சேர்ந்தவர் பாவாடை(வயது 68). இவரது மகன் பார்த்திபன்(28). இவர் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். 2 பேரும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.

இந்தநிலையில் பார்த்திபன் அவரது தந்தைக்கு சரியாக உணவு வழங்காமலும், பணம் எதுவும் கொடுக்காமலும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து பாவாடை அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று உணவு வாங்கி சாப்பிட்டு வந்தார்.

மற்ற வீடுகளுக்கு சென்று பாவாடை உணவு வாங்கி சாப்பிடுவதை பார்த்திபன் கண்டித்தார். ஆனாலும் பாவாடை தொடர்ந்து அந்த பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சென்று உணவு வாங்கி சாப்பிட்டார்.

இந்தநிலையில் நேற்று மாலை மதுகுடித்துவிட்டு பார்த்திபன் அவரது தந்தையிடம் மற்ற வீடுகளுக்கு சென்று உணவு வாங்கி சாப்பிடக்கூடாது என கூறினார்.

இதில் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பார்த்திபன் அவரது தந்தை பாவாடையை அடித்து உதைத்து கீழே தள்ளினார். இதில் பாவாடைக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே பார்த்திபன் அங்கிருந்து தப்பிஓடிவிட்டார். தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பாவாடையை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு பாவாடை பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து பார்த்திபனை கைது செய்தனர்.

தந்தையை மகன் அடித்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News