செய்திகள்

முதல்வரை பற்றி அவதூறாக பேசியதாக புகார்- ஆ.ராசா மீது வழக்கு

Published On 2018-12-08 17:24 GMT   |   Update On 2018-12-08 17:24 GMT
முதல்-அமைச்சரை பற்றி அவதூறாக பேசியதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மீது பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். #dmk #raj #edappadipalanisamy
பெரம்பலூர்:

பெரம்பலூரில் கடந்த செப்டம்பர் மாதம் 12-ந்தேதி அ.தி.மு.க. அரசை கண்டித்து தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா பங்கேற்று பேசினார். அப்போது அவர் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அமைச்சர்களை பற்றி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. வக்கீல் அணி துணை செயலாளர் துரைபெரியசாமி பெரம்பலூர் டவுன் போலீசில் இன்று புகார் மனு கொடுத்தார். அதில் முதல்- அமைச்சர் மற்றும் அமைச்சர்களை பற்றி அவதூறாக பேசிய தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். 

இதையடுத்து பெரம்பலூர் போலீசார் ஆ.ராசா மீது 503(பொதுமக்கள் அமைதிக்கு குந்தகம் விளைவித்தல்), 504(அவதூறாக பேசுதல்), 505 (அவதூறாக பேசி மனதை புண்படுத்துதல்), 506 (அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்தல்) ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். 

மேலும் இந்த புகார் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்த தொடங்கியுள்ளனர். செப்டம்பர் மாதம் நடைபெற்ற கூட்டத்தில் ஆ.ராசா பேசிய ஆடியோ, வீடியோ ஆதாரங்களை திரட்ட முடிவு செய்துள்ளனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #dmk #raj #edappadipalanisamy
Tags:    

Similar News