செய்திகள்

கஜா புயல் சேத விவரங்கள் தொடர்பான அறிக்கை மத்திய அரசிடம் 27-ந்தேதி தாக்கல்

Published On 2018-11-25 03:14 GMT   |   Update On 2018-11-25 03:14 GMT
கஜா புயலால் ஏற்பட்டுள்ள சேத விவரங்கள் தொடர்பான அறிக்கை மத்திய அரசிடம் 27-ந்தேதி மத்திய குழுவினர் தாக்கல் செய்கின்றனர். #GajaCyclone #CentralCommittee
திருச்சி:

புயல் சேதத்தை ஆய்வு செய்வதற்காக விமானம் மூலம் திருச்சிக்கு வந்த மத்திய குழுவின் தலைவர் டேனியல் ரிச்சர்டு நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட சேத விவரங்கள் குறித்து பிரதமர் மோடியிடம் ஒரு விளக்க அறிக்கை கொடுத்திருக்கிறார். மாநில அரசு சார்பில் புயல் நிவாரணமாக ஒரு குறிப்பிட்ட தொகை கேட்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழுவினர் ‘கஜா’ புயல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து ஒரு சேத விவரப்பட்டியல் தயார் செய்துள்ளனர். தற்போது எனது தலைமையிலான குழுவினர் அதில் உள்ளபடி, என்னென்ன பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்பதை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரடியாக சென்று ஆய்வு செய்ய இருக்கிறோம். அதன் பிறகே ஒட்டு மொத்தமான ஒரு மதிப்பீடு கிடைக்கும்.

புயல் சேத பகுதிகளை 3 நாட்கள் ஆய்வு செய்துவிட்டு டெல்லி திரும்பு முன்பு மத்திய குழுவினர் நாளை மாலையோ அல்லது செவ்வாய்க்கிழமை காலையோ சென்னை திரும்புகின்றனர். அப்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோரை மீண்டும் அவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர்.

இதைத்தொடர்ந்து இக் குழுவினர் கஜா புயலால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சேத விவரங்கள் தொடர்பான அறிக்கையை மத்திய அரசிடம் வருகிற 27-ந்தேதி தாக்கல் செய்கின்றனர். #GajaCyclone #CentralCommittee
 
Tags:    

Similar News