ஐ.சி.எப்.பில் தாறுமாறாக ஓடிய கார் மோதி இளம்பெண்- மாணவி படுகாயம்
அம்பத்தூர்:
வில்லிவாக்கம், தாகூர் நகர், 3-வது தெருவை சேர்ந்தவர் விஜயலட்சுமி (வயது 28). இவர், அண்ணன் மகளான 2-ம் வகுப்பு படிக்கும் சுசியுடன் (8) ஐ.சி.எப். சிக்னல் அருகே சாலையில் நடந்து வந்தார்.
அப்போது அதிவேகத்தில் தாறுமாறாக வந்த கார் திடீரென விஜயலட்சுமி, சுசி மீது பயங்கரமாக மோதியது. பின்னர் தறிகெட்டு ஓடி சாலையோர நடைபாதையில் மோதி நின்றது.
இதில் விஜயலட்சுமிக்கும், சுசிக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் காரை ஓட்டி வந்த வாலிபரை பிடித்து தாக்கினர். மேலும் காரின் கண்ணாடிகளையும் நொறுக்கினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பலத்த காயம் அடைந்த விஜயலட்சுமி, சுசிக்கு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து திருமங்கலம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சுசிலா வழக்கு பதிவு செய்து காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய அயனாவரத்தை சேர்ந்த தொழில் அதிபர் மகனான கல்லூரி மாணவர் சரணை கைது செய்தனர். பொதுமக்கள் தாக்கியதில் லேசான காயம் அடைந்த அவருக்கும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
அவர் காரை அதிவேகமாக ஓட்ட ரூ.2 லட்சம் வரை செலவு செய்து காரை மாற்றி வைத்து இருந்தார்.