செய்திகள்

மாணவிக்கு பாலியல் தொல்லை- பள்ளியில் புகுந்து ஆசிரியர் மீது பயங்கர தாக்குதல்

Published On 2018-10-22 11:18 GMT   |   Update On 2018-10-22 11:18 GMT
செங்கம் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் மீது 50 பேர் கும்பல் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
செங்கம்:

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்நாச்சிப்பட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கண்ணன் என்பவர் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவர், 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவியிடம் சில்மி‌ஷம் செய்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

ஆயுதபூஜை விடுமுறைக்கு முன்பு சிறப்பு வகுப்பு என்று அந்த மாணவியை தனியாக அழைத்து சீருடையை கழற்றுமாறு கூறி ஆசிரியர் கண்ணன் அத்துமீறி நடந்து கொண்டதாகவும் புகார் கூறப்படுகிறது.

இதுப்பற்றி யாரிடமும் சொல்லக் கூடாது, விவகாரம் வெளியே தெரிந்தால் உன் படிப்புக்கு தான் பிரச்சினை’ என்று மிரட்டியுள்ளார்.

ஆயுதபூஜை உள்ளிட்ட 4 நாள் தொடர் விடுமுறைக்கு பின்னர், இன்று வழக்கம் போல் பள்ளி திறக்கப்பட்டது. ஆனால், மாணவி பள்ளிக்கு செல்லவில்லை.

பெற்றோர் கேட்டதற்கு அழுது கொண்டே தனக்கு நேர்ந்த கொடுமையை மாணவி கூறினார். இதை கேட்டதும் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உறவினர்களுடன் பள்ளிக்கு சென்றனர்.

இவர்களுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்தவர்களும் பள்ளியை முற்றுகையிட்டனர்.

வகுப்பறைக்குள் புகுந்து ஆசிரியர் கண்ணனை பயங்கரமாக தாக்கி அடித்து உதைத்தனர். வகுப்பறையில் இருந்த மாணவ-மாணவிகள் அலறி கூச்சலிட்டனர்.

மாணவியின் உறவினர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் என சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஆசிரியர் கண்ணனை சூழ்ந்து கொண்டு சரமாரியாக தாக்கினர்.

வகுப்பறையில் இருந்த நாற்காலிகள், மேஜைகளை தூக்கி ஆசிரியர் கண்ணனை அடித்தனர். இதில் ஆசிரியர் நிலை குலைந்து போனார். அப்போதும், அவரை விடாமல் தொடர்ந்து தாக்கி கொண்டே இருந்தனர்.

தகவலறிந்ததும், செங்கம் போலீசார் பள்ளிக்கு விரைந்து வந்தனர். பலத்த காயமடைந்த ஆசிரியர் கண்ணனை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #tamilnews
Tags:    

Similar News