செய்திகள்

எச்.ராஜாவை கைது செய்ய வேண்டும்- முத்தரசன்

Published On 2018-09-25 08:15 GMT   |   Update On 2018-09-25 08:15 GMT
தமிழகத்தில் சாதியை, மத மோதல்களை உருவாக்கி சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் எச்.ராஜாவை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். #HRaja #Mutharasan
சென்னை:

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தந்தை பெரியாரை அவமதிக்க வேண்டும் என்ற குறுகிய நோக்கமுடையவர்கள், சிலையை சேதப்படுத்துவது, உடைப்பது, அவமரியாதை செய்வது என தொடர்ந்து இழிவான செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

திரிபுரா மாநிலத்தில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி ஏற்பட்டவுடன் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்கள் தாக்கப்பட்டனர். வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. அங்கு மாமேதை லெனின் சிலை உடைக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டது.

பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் எச்.ராஜா சிறிதும் நாகரீகமற்ற முறையில், திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டது போல், தமிழகத்திலும் பெரியார் சிலை அகற்றப்படும் என பகிரங்கமாக தெரிவித்தார்.

அதன் விளைவாக பெரியார் சிலை உடைப்பு, அவமரியாதை என தொடர் வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.

இதை தமிழக அரசு வேடிக்கை பார்ப்பது கண்டனத்துக்குரியது.

சட்டம் அனைவருக்கும் சமம் என்பது தற்போதுள்ள ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு பொருந்தாதா என்கிற கேள்வி எழுகின்றது.

தமிழகத்தில் சாதியை, மத மோதல்களை உருவாக்கி சட்ட விரோதமாக செயல்பட்டு வரும் எச்.ராஜாவை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

தந்தை பெரியார் சிலை உடைப்பு தொடர்ந்தால் எதிர் விளைவுகள் உருவாகும். அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டி வரும் என எச்சரிக்கின்றோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். #HRaja #Mutharasan
Tags:    

Similar News