செய்திகள்

தேனி - திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை

Published On 2018-09-24 05:41 GMT   |   Update On 2018-09-24 05:41 GMT
தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததால் பெரியாறு, வைகை அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. #Rain

கூடலூர்:

தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக வெயில் சுட்டெரித்து வந்தது. நீர்நிலைகளில் தண்ணீர் குறைய தொடங்கி உள்ளதால் விவசாயம் மட்டுமின்றி குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளா னார்கள்.

நேற்றும் பகல் பொழுதில் கடுமையான வெயில் கொளுத்தியது. மாலை நேரத்தில் கருமேகங்கள் சூழ்ந்து பலத்த மழை பெய்தது.

தேனி மாவட்டத்தில் தேனி, பெரியகுளம், கூடலூர், கம்பம், உத்தமபாளையம், ஆண்டிப்பட்டி, தேவதானப் பட்டி உள்ளிட்ட இடங்களில் இரவு முழுவதும் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் பூமி குளிர்ந்தது.

இதேபோல் திண்டுக்கல் மாவட்டத்திலும் திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, வத்தலக் குண்டு மற்றும் மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை பெய்தது.

நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கன மழையால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று வரை 208 கன அடி நீர் வந்தது. இன்று காலை அது 1330 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து 1200 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 125.55 அடியாக உள்ளது.

வைகை அணைக்கும் நீர்வரத்து 687 கன அடியில் இருந்து 1092 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 57.4 அடியாக உள்ளது. 1590 கன அடி நீர் திறந்து விடப்படுகிது.

மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 41.55 அடியாக உள்ளது. 8 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 115.29 அடியாக உள்ளது. 6 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

பெரியாறு 19.6, தேக்கடி 51.8, கூடலூர் 23.5, உத்தமபாளையம் 7.2, சண்முகாநதி அணை 12, வீரபாண்டி 30, வைகை அணை 81, மஞ்சளாறு 51.5, சோத்துப்பாறை 18, கொடைக்கானல் 25 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

Tags:    

Similar News