விடுதலை சிறுத்தைகள் பொதுச்செயலாளருக்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு - புதுவை அரசு ஏற்பாடு
புதுச்சேரி:
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார், புதுவை லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். எழுத்தாளரான இவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து இருந்தது.
இதைத்தொடர்ந்து அவருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு கடிதம் அனுப்பினார்.
இதைத்தொடர்ந்து ரவிக்குமாருக்கு பாதுகாப்பு அளிக்க புதுவை அரசு நடவடிக்கை மேற்கொண்டது. ரவிக் குமாருக்கு நேற்று மாலை முதல் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ரவிக்குமார் புதுவை சட்டசபையில் முதல்-அமைச்சர் நாராயணசாமியை சந்தித்து தனக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கியதற்கு நன்றி தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர். #VCK