செய்திகள்

பிறந்த நாள் விழா- பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய வாலிபர் கைது

Published On 2018-07-28 04:20 GMT   |   Update On 2018-07-28 04:20 GMT
சென்னை மேற்கு ஜாபர்கான்பேட்டையில் பிறந்தநாள் விழாவின் போது பட்டாக்கத்தியால் கேக் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை:

சென்னை மேற்கு ஜாபர்கான் பேட்டை அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் சதீஷ் (24). மருந்து கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

கடந்த 25-ந்தேதி இவரது பிறந்த நாளையொட்டி இரவு நண்பர்கள் கேக் வாங்கி வீட்டுக்கு வந்தனர்.

வீட்டுக்கு வெளியே நடுரோட்டில் கேக் வெட்டி கொண்டாடினர். அப்போது சதீஷிடம் பட்டா கத்தியை கொடுத்து கேக் வெட்ட கூறினர். அவரும் கத்தியால் கேக்கை வெட்டி நண்பர்களுக்கு கொடுத்தார். முகத்தில் கேக்கை பூசி கொண்டாடி மகிழ்ந்தனர்.

இதை செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரவ விட்டனர். இந்த வீடியோ காட்சியை பார்த்த எம்.ஜி.ஆர். நகர் போலீசார் விசாரணை நடத்தினர்.

இது தொடர்பாக வாலிபர் சதீசை போலீசார் கைது செய்தனர். அவர் மீது பட்டாக்கத்தியால் நடுரோட்டில் கேக் வெட்டி பொது மக்கள் மத்தியில் பீதியை உண்டாக்கியதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக போலீசார் கூறுகையில், “வீடியோவில் சதீசின் நடவடிக்கை பயமுறுத்தும் வகையிலும், மிரட்டும் தொனியிலும் இருந்தது.

அவர் பட்டாக்கத்தியால் கேக் வெட்டியதை ஏற்றுக் கொள்ள முடியாது. இது மற்ற இளைஞர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் தேவையில்லாத பிரச்சனை உருவாகலாம் என்றனர்.

கடந்த பிப்ரவரி மாதம் மாங்காடு அருகே ரவுடி பினு தனது பிறந்தநாளை கூட்டாளிகளுடன் கேக்கை அரிவாளால் வெட்டி கொண்டாடினார். இதையறிந்த போலீசார் அங்கு சென்று ரவுடிகளை மடக்கி பிடித்தனர்.

இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News