செய்திகள்

ஆம்பூர் அருகே ஆட்டோ மீது பஸ் மோதி சென்னை சிறுமி பலி

Published On 2018-06-09 05:52 GMT   |   Update On 2018-06-09 05:52 GMT
ஆம்பூர் அருகே லோடு ஆட்டோ மீது தனியார் பஸ் மோதியதில் 6 வயது சிறுமி பலியானார், 8 பேர் படுகாயமடைந்தனர்.

ஆம்பூர்:

சென்னை திருமங்கலம் காமராஜ் நகரை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 40). கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி வசந்தி (30) தம்பதிக்கு ராமச்சந்திரன் (12) என்ற மகனும் மாலினி (10), கீர்த்தி (6) என்ற மகள்களும் உள்ளனர்.

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே சின்னபுதூர் கிராமத்தில் இவர்களது குலதெய்வம் கோவில் உள்ளது. கோவிலுக்கு நேற்று இரவு தண்டபாணி தனது உறவினர்களுடன் ஒரு லோடு ஆட்டோவில் புறப்பட்டு வந்தார்.

ஆம்பூர் அருகே சென்னை பெங்களுரு தேசிய நெடுஞ்சாலையில் லோடு ஆட்டோ சென்று கொண்டிருந்த போது சென்னையில் இருந்து ஓசூர் நோக்கி சென்ற தனியார் சொகுசு பஸ் லோடு ஆட்டோவின் பின்புறம் மோதியது. இதில் லோடு ஆட்டோ சாலையின் அருகே இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

விபத்தில் லோடு ஆட்டோவில் பயணம் செய்த தண்டபாணியின் மகள் கீர்த்தி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

அவரது மனைவி வசந்தி (30), மகள் மாலினி(10), மகன் ராமச்சந்திரன் (12), மேலும் உறவினர்கள் கண்ணன் (56), ரேவதி (13) கீதா (16) சத்யா (12) மகேஸ்வரி (31) ஆகியோர் படுகாயமடைந்தனர்.

இது குறித்து தகவலறிந்த ஆம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இடுபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தவர்களை மீட்டு ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News