செய்திகள்

திருச்சி விமான நிலையத்தில் ரூ.13.41 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்

Published On 2018-06-05 10:19 GMT   |   Update On 2018-06-05 10:19 GMT
திருச்சி விமான நிலையத்தில் புதுக்கோட்டை பயணியிடம் இருந்து ரூ.13 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி:

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தினந்தோறும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது. பயணிகள் போக்குவரத்துடன், சரக்கு போக்குவரத்தும் உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதுபோல் தங்க நகை கடத்தல் உள்ளிட்ட செயல்களும் அதிரிகரித்துள்ளது.

ஆனாலும் சுங்கத்துறை அதிகாரிகள் நவீன ஸ்கேனிங் உள்ளிட்ட கருவிகள் மூலம் தங்கம் கடத்தலை தொடர்ந்து தடுத்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று இரவு விமான பயணியிடம் வெளி நாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு தனியார் விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்தது. இதில் செல்வதற்காக வந்த பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை போட்டனர்.

அப்போது சிங்கப்பூர் விமானத்தில் பயணிப்பதற்காக வந்த புதுக்கோட்டையை சேர்ந்த தனபால் என்பவரின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் அவரது பைக்குள் வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் இருந்ததை பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

அந்த பையில் 200 அமெரிக்க டாலர்கள் இருந்தன. அதன் மதிப்பு ரூ.13 லட்சத்து 41 ஆயிரத்து 600 ஆகும். இந்த பணம் தனபாலுக்கு எப்படி கிடைத்தது, யார் மூலம் பெற்றார், அந்த பணத்தை சிங்கப்பூருக்கு யாருக்காக எடுத்து சென்றார்? என தனபாலிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுவரை தங்கம், போதைப் பொருட்கள் கடத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News