நாகர்கோவிலில் ரஜினிகாந்த் உருவபடத்தை எரித்த பெண் உள்பட 9 பேர் மீது வழக்கு
நாகர்கோவில்:
தூத்துக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்தவர்களை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் அவர் கூறுகையில் சமூகவிரோத சக்திகளே தூத்துக்குடி கலவரத்திற்கு முக்கிய காரணம் என்றும், தொடர்ந்து போராட்டம் நடத்தினால் தமிழகம் சுடு காடாகிவிடும் என்றும் கூறினார். அவரது பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதேபோல் குமரி மாவட்ட மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு (விடுதலை) கட்சி சார்பிலும் நடிகர் ரஜினிகாந்துக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திடீரென்று நடிகர் ரஜினிகாந்தின் உருவபடத்திற்கு தீ வைத்து எரித்தனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தீயை அணைத்தனர்.
மேலும் வடசேரி போலீசார் நடிகர் ரஜினிகாந்தின் உருவபடத்தை எரித்த மாவட்ட செயலாளர் அந்தோணிமுத்து, மணவை கண்ணன், சுசீலா உள்பட 9 பேர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.