செய்திகள்

கொத்தடிமையாக இருந்து வாத்து மேய்த்த ஆந்திராவைச் சேர்ந்த 2 குழந்தைகள் மீட்பு

Published On 2018-05-18 04:04 GMT   |   Update On 2018-05-18 04:04 GMT
திருவாரூர் அருகே கொத்தடிமையாக இருந்து வாத்து மேய்த்த ஆந்திராவைச் சேர்ந்த 2 குழந்தைகளை போலீசார் மீட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர்:

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலத்தை அடுத்த செட்டி சத்திரத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றுபவர் ராஜேந்திரன். இவருக்கு செட்டி சத்திரம் பகுதியிலில் வசிக்கும் ஒரு தம்பதியினர் கொத்தடிமைகளாக குழந்தைகளை வைத்து வாத்து மேய்ப்பதாக தகவல் கிடைத்தது.

அதன்பேரில் ஆந்திரா மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த அந்த தம்பதிகளிடம் விசாரணை நடத்திய போது அவர்கள் ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த கிருஷ்ணய்யா, அவரது மனைவி லட்சுமியம்மா என்பதும் அவர்கள் பவானி (வயது 8), நாகராஜ் (10) ஆகிய குழந்தைகளை அவர்களின் பெற்றோரிடம் ரூ. 20 ஆயிரம் கொடுத்து வேலைக்கு அழைத்து வந்தது தெரியவந்தது.

அந்த குழந்தைகளை அவர்கள் கொத்தடிமைகளாக வைத்து வேலை வாங்கி வந்துள்ளனர். இதுபற்றி கிராம நிர்வாக அதிகாரி ராஜேந்திரன் திருவாரூர் மாவட்ட குற்றபிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், சப்-இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் கிருஷ்ணய்யா, அவரது மனைவி லட்சுமி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களிடம் கொத்தடிமைகளாக இருந்த 2 குழந்தைகளை மீட்டனர்.

இந்த சம்பவம் நீடாமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News