செய்திகள்

ஓமலூர் போலீஸ் நிலையத்தில் சீமான் உள்பட 10 பேர் மீது வழக்கு

Published On 2018-05-15 08:28 GMT   |   Update On 2018-05-15 08:28 GMT
ஓமலூர் போலீஸ் நிலையத்தில் சீமான் உள்பட 10 பேர் மீது கொலை மிரட்டல் விடுத்து பொது மக்களுக்கும், பொது அமைதிக்கும் குந்தகம் ஏற்படும் வகையில் செயல்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஓமலூர்:

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள சேலம் விமான நிலைய விரிவாக்கம் செய்யும் பொட்டியபுரம் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது எந்த சூழ்நிலையிலும் விமான நிலைய விரிவாக்கப் பணிக்கு விளை நிலங்களை கொடுக்க மாட்டோம். அரசு அதை எடுக்க முயற்சி செய்தால் எனது தலைமையில் ஆங்காங்கே குடிசை அமைத்து போராட்டம் நடத்துவோம் என்று பேசினார்.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சேலமே குரல்கொடு அமைப்பு தலைவர் பியூஸ் சேத்தியா உட்பட 10 பேர் மீது பொட்டியபுரம் கிராம நிர்வாக அலுவலர் நடராஜன் ஓமலூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் பியூஸ் சேத்தியா தலைமையில் விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் எடுப்பதை கண்டித்து பொது கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கொலை மிரட்டல் விடுத்து பொது மக்களுக்கும், பொது அமைதிக்கும் குந்தகம் ஏற்படும் வகையில் பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

இதன் பேரில் சீமான், பியூஸ் சேத்தியா மற்றும் உள்ளூர் கிராமங்களை சேர்ந்த 8 பேர் உட்பட 10 பேர் மீது 143, 188, 506(1) ஆகிய பிரிவுகளின் கீழ் ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த வழக்குப்பதிவை தொடர்ந்து அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக ஓமலூர் போலீசார் தெரிவித்தனர். #Tamilnews
Tags:    

Similar News