செம்மண் குவாரி வழக்கு: பொன்முடி மீதான விசாரணை ஜூன் 4-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
விழுப்புரம்:
வானூர் தாலுகா பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததாக தி.மு.க.முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்.எல்.ஏ., ராஜமகேந்திரன், கவுதமசிகாமணி, லோகநாதன், சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத் ஆகிய 8 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
விழுப்புரம் ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு நேற்று இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது பொன்முடி எம்.எல்.ஏ., லோகநாதன், சதானந்தன், கோபிநாத், ஜெயச்சந்திரன் ஆகிய 5 பேர் மட்டும் ஆஜராகினர். மற்றவர்கள் ஆஜராகவில்லை.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி (பொறுப்பு) மோனிகா, இந்த வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் (ஜூன்) 4-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இதேபோல் பொன்முடி எம்.எல்.ஏ., அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோர் மீது தொடரப்பட்ட சொத்து குவிப்பு வழக்கும் இதே கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.
அப்போது பொன்முடி எம்.எல்.ஏ. ஆஜரானார். விசாலாட்சி ஆஜராகவில்லை. அவர் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையையும் அடுத்த மாதம் (ஜூன்) 4-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி மோனிகா உத்தரவிட்டார்.