செய்திகள்

திண்டுக்கல் அருகே தூக்கில் பிணமாக தொங்கிய தாய்-மகள்: 9-ம் வகுப்பு மாணவி உயிருக்கு போராட்டம்

Published On 2018-04-20 09:40 GMT   |   Update On 2018-04-20 09:40 GMT
திண்டுக்கல் அருகே குடும்ப பிரச்சினையில் தாய்-மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேடசந்தூர்:

திண்டுக்கல் அருகே வேடசந்தூர் சேடபட்டி வடக்கு தோட்டத்தை சேர்ந்தவர் பாண்டி. கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வீரம்மாள் (வயது35). இவர்களுக்கு ராஜதுரை (15) என்ற மகனும், ரஞ்சனி (14), ரஞ்சிதா (11) என்ற மகள்களும் உள்ளனர். ரஞ்சனி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பும், ரஞ்சிதா 7-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

கடந்த சில நாட்களாகவே பாண்டி குடும்பத்தில் கருத்து வேறுபாடு காரணமாக பிரச்சினை இருந்தது. இன்று பாண்டி வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார். ராஜதுரையும் வெளியே சென்றார்.

வீட்டில் இருந்த வீரம்மாள் மற்றும் மகள்கள் மனஉளைச்சலில் இருந்ததால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி 3 பேரும் வீட்டின் உள்ளேயே தூக்கு போட்டனர்.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஒன்று திரண்டனர். கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது 3 பேரும் தூக்கில் தொங்கியது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் வீரம்மாள் மற்றும் ரஞ்சிதா பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது. ரஞ்சனி உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து குடும்ப பிரச்சினைதான் காரணமா? அல்லது வேறு ஏதும் நடந்துள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News