செய்திகள்

அதிகாரிகளை கண்டித்து கிராம மக்கள் விடிய விடிய மலையில் குடியேறும் போராட்டம்

Published On 2018-04-20 08:58 GMT   |   Update On 2018-04-20 08:58 GMT
உத்தமபாளையம் அருகே அதிகாரிகளை கண்டித்து கிராம மக்கள் விடிய விடிய மலையில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உத்தமபாளைம்:

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ளது சின்ன ஓவுலாபுரம். இங்கு ஆதிதிராவிடர் காலனிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் அப்பகுதியில் உள்ள கோவில் மற்றும் மயானத்துக்கு பொதுமக்கள் செல்ல முடியவில்லை.

எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி உத்தமபாளையம் தாலுகா அலுவலகம் மற்றும் தேனி மாவட்ட கலெக்டர் அலவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் உத்தரவின் பேரில் ஆக்கிரமிப்பு இடத்தை வருவாய்த்துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதில் குறிப்பிட்ட இடம் தனியார் பட்டா இடமாக உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் அப்பகுதியை விட்டு வெளியேறி வெள்ளைக்கரடு மலைப் பகுதியில் குடியேறி போராட்டம் நடத்தினர். அவர்கள் வருவாய்துறையினரை கண்டித்து கோ‌ஷமிட்டனர். அங்கேயே உணவு தயாரித்து சாப்பிட்டு போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

சம்பவம் குறித்து அறிந்ததும் விரைந்து வந்த ஆர்.டி.ஓ. சென்னியப்பன் மற்றும் போலீஸ் டி.எஸ்.பி.க்கள் சீனிசாமி, பிரபாகரன் தலைமையிலான போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் போலி ஆவணங்கள் தயாரித்து ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தை மீட்கும் வரை கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்து வெள்ளைக்கரடு மலைப்பகுதியிலேயே தங்கியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது. #tamilnews

Tags:    

Similar News