செய்திகள்

சாத்தனூர் வனப்பகுதியில் துப்பாக்கியால் சுட்டு வாலிபர் கொலை

Published On 2018-03-26 05:13 GMT   |   Update On 2018-03-26 05:13 GMT
சாத்தனூர் வனப்பகுதியில் துப்பாக்கி சுட்டு வாலிபர் கொல்லப்பட்டார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தண்டராம்பட்டு:

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள சாத்தனூர் வனப்பகுதியில் நேற்று மாலை ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்ற சிலர், ஒரு வாலிபர் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த நிலையில் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

குண்டு பாய்ந்ததில் வாலிபரின் வாய் கிழிந்திருந்தது. இதுகுறித்து, சாத்தனூர் அணை போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்தனர். உடலுக்கு அருகே நாட்டுத் துப்பாக்கி, டார்ச் லைட் கிடந்தது.

விசாரணையில், இறந்த வாலிபர் ஜவ்வாதுமலையில் உள்ள ஜமுனாமரத்தூரை சேர்ந்த கணபதி (வயது 35) என்பது தெரியவந்தது. இவர், சாத்தனூர் வனப்பகுதிக்கு காட்டுப்பன்றி, முயல் உள்ளிட்ட சிறு,சிறு வன விலங்குகளை வேட்டையாட வந்திருக்கலாம்.

அப்போது, மற்றொரு வேட்டை கும்பலுடன் ஏற்பட்ட மோதலில் வாயில் துப்பாக்கியை வைத்து மிரட்டி சுட்டு கொன்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

அதே நேரத்தில் வேறு ஏதாவது பிரச்சினை காரணமாக கணபதியின் எதிராளிகள் அவரை கடத்தி வந்து, சுட்டுக் கொன்று விட்டு அருகில் நாட்டுத்துப்பாக்கியையும், டார்ச் லைட்டையும் வீசி விட்டு சென்றிருக்கலாம் என்ற மற்றொரு கோணத்தில் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

கணபதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, நாட்டு துப்பாக்கி மற்றும் டார்ச் லைட்டை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews

Tags:    

Similar News