செய்திகள்
பலியான தனலெட்சுமி.

கும்பகோணம் அருகே கர்ப்பிணி பெண் பாம்பு கடித்து மரணம்

Published On 2018-03-24 11:13 GMT   |   Update On 2018-03-24 11:13 GMT
கும்பகோணம் அருகே பிரசவத்துக்கு புறப்பட்ட கர்ப்பிணி பெண் பாம்பு கடித்து மரணமடைந்த சம்பவம் உறவினர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கும்பகோணம்:

கும்பகோணத்தை அடுத்த வலங்கைமான் தாலுகா இனாம்கிளியூர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். பூ மாலை வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி தனலெட்சுமி (வயது 34). இந்த தம்பதிக்கு மணிகண்டன் (12) என்ற மகன் உள்ளான். அவன் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறான்.

இந்த நிலையில் தனலெட்சுமி 2-வது முறையாக கர்ப்பமாக இருந்தார். அவருக்கு இன்று குழந்தை பிறக்கும் என்று டாக்டர்கள் கூறியிருந்தார். இதற்காக நேற்று இரவு வீட்டில் இருந்து அவர் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்வதற்கு தயாராக இருந்தார். அப்போது அவர் மணிகண்டனை அழைத்து கொண்டு வீட்டின் பின்புறம் சென்றார். அங்கு தனலெட்சுமியை ஒரு பாம்பு கடித்து விட்டது. இதனால் வலிதாங்க முடியாமல் அவர் அலறினார். உடனே அவரது உறவினர்கள் அங்கு சென்று பார்த்த போது தனலெட்சுமியை பாம்பு கடித்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் அவரை மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு தனலெட்சுமியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர். மேலும் அவரது வயிற்றில் இருந்த சிசுவும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை கேட்டதும் கணவர் கிருஷ்ணன் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

இன்று குழந்தை பிறக்க வேண்டிய நிலையில் தாய் மற்றும் வயிற்றில் இருந்த சிசு இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து கும்பகோணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News