தமிழகத்தில் கல்வியின் தரம் குறைந்துள்ளது- ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி
தஞ்சாவூர்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தஞ்சையில் நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க எடப்பாடி அரசின் ஓராண்டு நிறைவு விழா நாளை கொண்டாடப்படுவதாக செய்தி வந்துள்ளது. இந்த ஓராண்டில் வேதனையும், சோதனையும் தான் நடந்தது. மார்ச் 31ந் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியும் மத்திய மாநில அரசும் கண்டுகொள்ளாமல் உள்ளது. திடீரென பஸ்கட்டன உயர்வு. பல்கலைக்கழக துணை வேந்தர் நியமனத்தில் ஊழல். சாதி ஆவண கொலையால் 187 பேர் கொள்ளப்படுவது தொடர் கதையாக உள்ளது. செயின் பறிப்பு, கொலை, கொள்ளை அதிகமாக நடக்கிறது. தமிழ்நாட்டில் படிப்பின் தரம் குறைந்துள்ளது. இதனால் அரசு பள்ளிகளில் இருந்து தனியார் பள்ளிகளுக்கு அதிக அளவில் மாணவர்கள் செல்கின்றனர். இதனால் ஏராளமான அரசு பள்ளிகளை மூட வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதுவே இதற்கு சான்றாகும்.
காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த மாதம் 5,6 ஆகிய தேதிகளில் ரெயில் மறியல் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசின் மீது மாநில அரசு நீதி மன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாநில செயற்குழு உறுப்பினர் லாசர், மாவட்ட செயலாளர் சாமி. நடராஜன் ஆகியோர் உடன் இருந்தனர்.