அரக்கோணத்தில் சரக்கு ரெயில் தடம் புரண்டது- 3 ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம்
அரக்கோணம்:
கேரள மாநிலம் எர்ணா குளத்தில் இருந்து தெலுங் கானா மாநிலம் கம்பத்திற்கு செல்லும் சரக்கு ரெயில் இன்று காலை காட்பாடி ரெயில் நிலையத்தை கடந்து அரக்கோணம் மார்க்கமாக சென்று கொண்டிருந்தது. இந்த ரெயில் அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு செல்லாமல் அதற்கு முன்பு உள்ள மேல் பாக்கம் யார்டு வழியாக திரும்பி திருத்தணி, ரேணிகுண்டா வழியாக செல்ல கூடியது.
மேல்பாக்கம் யார்டுக்கு சென்ற போது சரக்கு ரெயில் திடீரென தடம் புரண்டது. ரெயிலின் 6 மற்றும் 7-வது பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கி தடம் புரண்டன. இதையறிந்த என்ஜின் டிரைவர் ரெயிலை உடனடியாக நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தடம் புரண்ட ரெயிலை மீட்டு தண்டவாளத்தையும் சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனால், சென்னை செல்லும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், லால்பாக் உள்பட 3 ரெயில்கள் நடு வழியில் நிறுத்தப்பட்டு தாமதமாக இயக்கப்பட்டன.