தஞ்சையில் பிரபல ரவுடி வெட்டி படுகொலை
தஞ்சாவூர்:
தஞ்சை கீழவாசல் பகுதியைச் சேர்ந்தவர் துரைராஜ். இவரது மகன் கார்த்திகேயன் என்கிற குரங்கு கார்த்திகேயன் (வயது25) பிரபல ரவுடியான இவர் மீது தஞ்சை மேற்கு மற்றும் கிழக்கு போலீசில் வழிப்பறி, மிரட்டல் உள்பட 5 வழக்குகள் உள்ளன.
அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பர் ஜெயராம் (27). இந்தநிலையில் இருவரும் நேற்று டபீர் குளம் ரோடு பகுதியில் நின்று கொண்டிருந்தனர். அப்போது தஞ்சை கீழவாசல் சுப்பிரமணிய கோவில் தெருவைச் சேர்ந்த மீன்வெட்டும் தொழிலாளி ஷாஜகான் (23)அவரது நண்பர் விஜய் (25) ஆகியோர் அங்கு வந்தனர். இந்த நிலையில் முன்விரோதம் காரணமாக திடீரென 4 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த ஷாஜகான் தான் வைத்திருந்த அரிவாளை எடுத்து கார்த்திகேயனை சரமாரி வெட்டினார். இதை தடுக்க முயன்ற ஜெயராம் கையில் வெட்டு விழுந்தது. இதில் 2 பேரும் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தனர்.
இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் தஞ்சை கிழக்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து அங்கு விரைந்து வந்த போலீசார் அவர்கள் 2 பேரையும் மீட்டு தஞ்சை அரசு மருத்துவ க்கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை கார்த்திகேயன் இறந்தார்.
இதைதொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி ஷாஜகான் அவரது நண்பர் விஜய் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
விசாரணையில் ஷாஜகான், சித்தப்பா காதர் மைதீனிடம் ரூ.200 மிரட்டி கார்த்திகேயன் வாங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று இதுகுறித்து கேட்ட போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபத்தில் கார்த்திகேயனை வெட்டியதாகவும், இதை தடுக்க வந்த ஜெயராமை வெட்டினேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews