செய்திகள்

மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து காலி செய்யப்பட்ட கடைகளுக்கு மாற்று இடம் வழங்கக் கோரிய வழக்கு

Published On 2018-03-06 10:19 GMT   |   Update On 2018-03-06 10:19 GMT
மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து காலி செய்யப்பட்ட கடைகளுக்கு மாற்று இடம் வழங்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் கலெக்டர், மாநகராட்சி கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை:

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கடை வியாபாரிகள் சங்கத்தலைவர் ராஜநாகலு மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருப்பதாவது:-

கடந்த பிப்ரவரி 2-ந்தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கிழக்கு கோபுர பகுதியில் உள்ள வீரவசந்தராயர் மண்டபத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அந்தப்பகுதியில் இருந்த 20 கடைகள் முற்றிலும் எரிந்து சாம்பலானது.

தீ விபத்தையடுத்து கோவில் நிர்வாகம் கோவிலில் இருந்த அனைத்து கடைகளையும் அப்புறப்படுத்தியது. இந்த கடைகளால் தான் எங்கள் குடும்ப வாழ்வாதாரம் உள்ளது. எனவே எங்களுக்கு கடை அமைக்க மாற்று இடம் வேண்டும்.

மதுரை வடக்கு மாரட் வீதியில் பழைய காய்கறி மார்க்கெட் இருந்த இடத்தை எங்களுக்கு ஒதுக்கித்தர உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று நீதிபதி பாரதிதாசன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாற்று இடம் வழங்குவது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை, மாவட்ட கலெக்டர், மாநகராட்சி கமி‌ஷனர் ஆகியோர் பதில் அளிக்க நோட்டீசு அனுப்பி உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை 16-ந் தேதிக்கு ஒத்தி வைத்தார். #Tamilnews
Tags:    

Similar News