ஓச்சேரி அருகே வேன்-லாரி மோதல்: 3 பேர் பலி
ஆற்காடு:
வேலூரில் இருந்து கோழிகளை ஏற்றிக் கொண்டு சென்னை நோக்கி வேனில் 4 பேர் இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தனர்.
காவேரிப்பாக்கம் அடுத்த ஓச்சேரி அருகே சென்று கொண்டு இருந்த போது வேனின் டயர் வெடித்தது. இதில் நிலை தடுமாறிய வேன் தடுப்புகளை உடைத்து மறுபக்க சாலையில் சென்று சென்னையில் இருந்து வேலூர் நோக்கி வந்து கொண்டிருந்த லாரி மீது அதிவேகமாக மோதியது.
இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி கோழி ஏற்றி சென்ற வேனில் இருந்த ராணிப்பேட்டையை சேர்ந்த தீனா என்கிற தினரகன், (வயது45). ஆம்பூரை சேர்ந்த அன்சர் பாஷா (25) ஆகிய 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
காயம் அடைந்த அக்பர் பாஷா (40) வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
மேலும் கோழி வேனில் வந்த அகமதுல்லா (24) எதிரே வந்த லாரியில் இருந்த எபிநேசன் (30). ஆகிய 2 பேர் காயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து அவலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.