செய்திகள்

நெல்லை அருகே பிரபல டாக்டர் தீக்குளித்து தற்கொலை

Published On 2017-11-16 04:51 GMT   |   Update On 2017-11-16 04:51 GMT
நெல்லை அருகே பிரபல டாக்டர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நெல்லை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை:

நெல்லையை அடுத்த தாழையூத்தை சேர்ந்தவர் முரளி. இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி டாக்டர் உஷாராணி(வயது52). இவர்களுக்கு சாய் பிரகாஷ் என்ற மகனும், ஸ்ரீமதி என்ற மகளும் உள்ளனர். சாய் பிரகாஷ் என்ஜினீயரிங் படித்து வருகிறார். ஸ்ரீமதி பிளஸ்-2 படித்து வருகிறார்.

டாக்டர் உஷாராணி தாழையூத்து பஜாரில் கிளினிக் நடத்தி வருகிறார். உஷாராணிக்கும் அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக தெரிகிறது. மேலும் உஷாராணியின் நடத்தையில் முரளி சந்தேகப்பட்டு வந்தாராம். இந்த நிலையில் டாக்டர் உஷாராணி வீட்டில் இருந்தார். நள்ளிரவு அங்கு மருத்துவத்துக்கு பயன்படுத்த வைத்திருந்த எத்தில் ஆல்கஹாலை(எரிசாராயம்) எடுத்து தலையில் ஊற்றி தீவைத்துக்கொண்டார்.

இதனால் அவர் உடல் முழுவதும் தீ பற்றி எரிந்தது. சிறிது நேரத்தில் உஷாராணி பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தாழையூத்து போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரபல டாக்டர் தற்கொலை செய்த சம்பவம் நெல்லை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News