செய்திகள்

எடப்பாடி பழனிசாமி - ஓ.பி.எஸ். இடையே கருத்து வேறுபாடு இருப்பது உண்மை தான்: தங்க தமிழ்ச்செல்வன்

Published On 2017-11-09 07:36 GMT   |   Update On 2017-11-09 07:36 GMT
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி- ஓ.பி.எஸ். பன்னீர் செல்வம் இடையே கருத்து வேறுபாடு இருப்பது உண்மை தான் என்று தங்க தமிழ்ச்செல்வன் கூறினார்.
சாத்தூர்:

தமிழக சட்டசபை முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் 11-வது நினைவு நாள் சாத்தூர் அருகேயுள்ள அவரது சொந்த கிராமமான ராமுத்தேவன்பட்டியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அ.தி.மு.க. அம்மா அணி கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்ச் செல்வன் கூறியதாவது:-

‘’பிரதமர் மோடி தி.மு.க தலைவரை காண வந்தபோது, தி.மு.க.வுக்கும் அவர்களுக்கும் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. 2ஜி வழக்கின் தீர்ப்பு தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளதே அதற்கு சான்றாகும்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது 100 சதவீதம் உண்மை. முதல்வரை அழைத்துப் பேசாத மோடி, துணை முதல்வரை அழைத்துப் பேசுகிறார். இதுவே அதற்கு உதாரணம்.

ஜெயலலிதா மரணம் பற்றி விசாரணை செய்தால், அதில் முதலாவதாக விசாரணை செய்ய வேண்டியவர், அன்றைய முதல்வர் ஓ.பி.எஸ். தான். இரட்டை இலை வழக்கு விசாரணையின் இறுதித் தீர்ப்பு எங்களுக்கே நிச்சயம் சாதகமாக கிடைக்கும்‘’.

மேற்கண்டவாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News