செய்திகள்

மாதவரம் அருகே போலி பத்திரம் தயாரித்து ரூ. 5 கோடி நிலம் அபகரிப்பு - 3 பேர் கைது

Published On 2017-11-09 06:30 GMT   |   Update On 2017-11-09 06:30 GMT
மாதவரம் அருகே போலி பத்திரம் தயாரித்து நிலத்தை ரூ.5 கோடிக்கு விற்க முயன்ற பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
மாதவரம்:

பொன்னேரியை சேர்ந்தவர் தாமோதரன். இவருக்கு சொந்தமான நிலம் மாதவரத்தை அடுத்த மஞ்சம்பாக்கத்தில் உள்ளது. இந்த இடத்தை தாமோதரனின் மகன் சேகர் பார்க்க வந்தார்.

அப்போது சிலர் நிலத்தை சுத்தம் செய்து விற்கும் முயற்சியில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது. இது குறித்து மாதவரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. துணை கமி‌ஷனர் கலைச் செல்வம், உதவி கமி‌ஷனர் ஜெயசுப்பிரமணியம், இன்ஸ்பெக்டர் செல்வகுமார் விசாரணை நடத்தினர்.

இதில் மாதவரம் மந்தை வெளியை சேர்ந்த மின்வாரிய ஊழியர் பாஸ்கர், அவரது நண்பர் சதீஷ் ஆகியோர் போலி பத்திரம் தயாரித்து நிலத்தை விற்க முயன்றது தெரிந்தது.

இதற்கு பொன்னேரியை அடுத்த நெய்தவாயலை சேர்ந்த செல்வம், ஆந்திர மாநிலம் காளஹஸ்தியை சேர்ந்த மரகதம், மாதவரத்தை சேர்ந்த சஞ்சித் குமார் ஆகியோர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து சஞ்சித்குமார், மரகதம், செல்வம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதில் கைதான செல்வம், வக்கீல் ஒருவரிடம் குமாஸ்தாவாக வேலை பார்த்து வருகிறார். மேலும் தலைமறைவான மின்வாரிய ஊழியர் பாஸ்கர், அவரது நண்பர் சதீசை போலீசார் தேடிவருகிறார்கள்.
Tags:    

Similar News