செய்திகள்
ஆண்டிப்பட்டி அருகே விபத்து: சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் பலி
ஆண்டிப்பட்டி அருகே சாலை விபத்தில் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் பரிதாபமாக பலியாகினர்.
தேனி:
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே பாப்பம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் மாரிச்சாமி (வயது 54). இவர் தேனி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தார். இவரது நண்பர் அதே பகுதியைச் சேர்ந்த தனுஷ்கோடி (வயது 60). ஓய்வு பெற்ற அரசு பேருந்து கண்டக்டர். இருவரும் காலை நேரத்தில் நடைபயிற்சி செல்வது வழக்கம். அது போல் இன்றும் காலை ஆண்டிப்பட்டி சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டு இருந்தார்கள்.
ஆண்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரி அருகே நடந்து சென்று கொண்டு இருந்த போது திருநெல்வேலியில் இருந்து தேவாரம் நோக்கி சென்ற மினி லாரி இவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் படுகாயமடைந்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.
இது குறித்து வழக்குபதிவு செய்த ஆண்டிப்பட்டி போலீசார் மினி லாரி டிரைவர் தேவாரத்தைச் சேர்ந்த விஜி என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.