செய்திகள்
மீஞ்சூரில் மாநகர பஸ் மோதி 2 வாலிபர்கள் பலி
மீஞ்சூரில் மாநகர பஸ் மோதியதில் 2 வாலிபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.
பொன்னேரி:
மீஞ்சூரை அடுத்த பட்ட மந்திரி பகுதியை சேர்ந்தவர் காமேஷ் (18). தனியார் கம்பெனியில் வேலை பார்த்தார். இவரது நண்பர் நவீன் (17). ஐ.டி.ஐ.யில் படித்து வந்தார். இருவரும் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் மீஞ்சூரில் இருந்து பட்டமந்திரிக்கு சென்று கொண்டிருந்தனர்.
மீஞ்சூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே முன்னால் சென்ற தனியார் கம்பெனி பஸ்சின் பின்புறம் மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறிய போது எதிரே வந்த மாநகர அரசு பஸ் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே காமேஷ் உடல் நசுங்கி இறந்தார்.
படுகாயம் அடைந்த நவீனை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்தார். இது குறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.